Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ம.க.வுடன் கூட்டணி என்பதே கிடையாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்

செப்டம்பர் 16, 2020 08:15

சென்னை ''தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கூட்டணி வைக்காது,''  என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் அனைத்து கட்சிகளும் படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரையில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது.
கூட்டணி கட்சிகள் சிலவற்றையும் கூட உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க முயற்சிக்கிறது. கடந்த காலங்களைப் போல தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இம்முறை சீட்டுகளை அள்ளி கொடுக்காது என்பதால் அந்த கூட்டணியில் மாற்றங்கள் வரலாம் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க. அணியைப் பொறுத்தவரையில் அதன் கூட்டணி கட்சிகளாக இருந்த அனைத்தும் ஆளுக்கு ஒரு திசையில் இருக்கின்றன. அ.தி.மு.க. அணியில் இருந்த பா.ஜ.க. தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கிறது; பதிலுக்கு பா.ஜ.க.வை அ.தி.மு.க. அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர். தே.மு.தி.க.வைப் பொறுத்தவரையில் வழக்கம் போல எல்லா கூட்டணிகளுக்கும் கதவை திறந்து வைத்திருக்கிறது. கதவை திறந்துவைப்போம். வந்த வரை லாபம் என்பதுதான் தே.மு.தி.க.வின் கூட்டணி பாலிசியாகிவிட்டது. இதனையே இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பின்பற்றுகிறது.
பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த் கட்சியுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கும். இதற்கான முயற்சிகளை ரஜினிகாந்த் தரப்பு படுதீவிரமாக மேற்கொண்டது. இதனை பா.ம.க. தரப்பும் ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. இப்போதும் பா.ம.க. ரஜினி கட்சி கூட்டணி அமையவே வாய்ப்புகள் அதிகம் என்கிற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கவே அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது. தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராகி உள்ள துரைமுருகன் இதற்கான முன்முயற்சிகளை படுமுனைப்பாக மேற்கொண்டு வருகிறார் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் அங்கம் வகிக்கலாம் என்கிற கருத்து வலுவாகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரோ, பா.ம.க.வுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டோம். இதனை கொள்கை முடிவாகவே எடுத்திருக்கிறோம். கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். திருமாவளவனின் இந்த நிலைப்பாடு பல்வேறு புதிய யூகங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் தங்கள் நினைத்தபடி சீட் பெற முடியாத நிலைக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளன. ஒருவேளை தற்போதைய தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. இணையும் நிலையில் இயல்பாகவே விடுதலை சிறுத்தைகள் விலகலாம். போதுமான சீட்டுகள் கிடைக்காத நிலையில் காங்கிரஸும் தி.மு.க. அணியில் இருந்து வெளியேறக் கூடும். இதனால் தி.மு.க. அ.தி.மு.க. அல்லாமல் தினகரனின் அ.ம.மு.க. அல்லது மக்கள் நீதி மய்யம் அல்லது ரஜினி கட்சி தலைமையில் மேலும் ஒரு கூட்டணி வலிமையாக அமையவும் வாய்ப்பிருக்கிறது என்றே அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்